தமிழீழம்,

தமிழீழம்,

Friday, June 3, 2011

தஞ்சையில் உருவாகும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்! கவிஞர் காசி ஆனந்தன் வேண்டுகோள்!

இராசராசசோழன் தஞ்சையில் மாபெரும் கற்கோயிலை எழுப்பினான். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் அது கம்பீரமாகக் காட்சி தருகிறது. தமிழர்களின் சிற்பத் திறனுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. அதே தஞ்சையில் முள்ளிவாய்க்காலில் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் நினைவாக மற்றொரு கற்கோயில் எழுப்பப்பட்டு வருகிறது
,

ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளித்துத் தியாகம் செய்த முத்துக்குமார் உட்பட 19 ஈகிகளின் நினைவாகவும் சிற்ப நுணுக்கம் மிகுந்த நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டு வருகிறது.

இராசராசன் எழுப்பிய தஞ்சைக் கற்கோயிலுக்குப் பயன்படுத்திய அதே ரக கற்கள் கண்டறியப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெரும் பொருட் செலவில் தஞ்சைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

50 தொன்னிற்கு மேலான எடையும் 40 அடி நீளமும் 10 அடி உயரமும் 3 அடி கனமும் கொண்ட பெரும் கற்களில் நூற்றுக்கு மேற்பட்ட சிற்பிகள் இரவு பகலாக அற்புதமான சிற்பங்களைச் செதுக்கி வருகிறார்கள்.

முள்ளிவாய்க்காலில் படுகொலையாகி வீழ்ந்து கிடக்கும் மக்களின் அவலக் காட்சியும், முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுப் புலம்பும் மக்களின் துயரக் காட்சியும், முத்துக்குமார் உட்பட தமிழ்நாட்டிலும் உலக நாடுகளிலும் உயிர்த் தியாகம் செய்த ஈகிகளின் சிலைகளும் செதுக்கப்பட்டு வருகின்றன.

ஓவிய மண்டபம் ஒன்றும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முக்கிய நிகழ்ச்சிகள் ஓவியங்களாக வரையப்பட்டு இங்கு வைக்கப்படும்.

தமிழகத்தில் இதுவரை இத்தகைய சிற்ப நினைவகம் அமைக்கப்பட்டதில்லை என்று சொல்லுமளவிற்கு இது உருவாக்கப்பட்டு வருகிறது. அழியாமல் நின்று ஆயிரமாயிரம் மக்களின் துயரத்தைத் தமிழர்களுக்குத் தலைமுறை தலைமுறையாக நினைவூட்டும் வகையில் எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த மாபெரும் பணியில் உலகத் தமிழர்கள் ஒவ்வொருவரின் பங்கும் இருக்க வேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்பு விரும்புகிறது. வேண்டுகிறது.

கவிஞர் காசி ஆனந்தன் வேண்டுகோள்

இனிய உலகத் தமிழ் நெஞ்சங்களே!

2009 மே 17-18 ல் நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவாக தமிழ்நாட்டில் - தஞ்சையில் - கருங்கல் சிற்பங்களால் அமைந்த மிகப்பெரிய நினைவுச் சின்னம் ஒன்றினை உருவாக்கும் பணியில் உலகத் தமிழர் பேரமைப்பு ஈடுபட்டுள்ளது. இதற்கான சிற்ப வேலைகளில் நூற்றுக்கும் அதிகமான தமிழகச் சிற்பக் கலைஞர்கள் உழைத்து வருகிறார்கள்.

நினைவுக் கூடம் ஒன்றை உள்ளடக்கியதாய் அமையும் இந்த 'முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில்' - முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த சிங்கள இனவெறிக் கொடுமைகள் - கொன்று குவிக்கப்பட்ட தமிழர் துயரங்களோடு - தமிழ்நாட்டில் முள்ளிவாய்க்கால் போரின் கொடுமைகளுக்கு எதிராகத் தீக்குளித்து மடிந்த மாவீரர்களுக்கும் சிலைகள் நிறுவப்படுகின்றன.

தமிழீழத்தையும் - தமிழ் நாட்டையும் என்றென்றும் இணைக்கும் உறவுப் பாலமாக தஞ்சையில் தலை நிமிரும் முள்ளிவாய்க்கால் நினைவகம் திகழும்.

தமிழீழத்தில் நமது மாவீரர்களின் கல்லறைகள் - சிலைகள் - நினைவுச் சின்னங்கள் அனைத்தும் தகர்த்து அழிக்கப்பட்டன. தமிழ் நாட்டில் அமையும் 'முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்' உலகத் தமிழர் அனைவரையும் தட்டி எழுப்பும் வரலாற்றுத் தீப்பொறியாய் நின்று - சிங்கள இனவெறியர் சூழ்ச்சிகளைத் தகர்த்து அழிக்கும்.

இனிய உலகத் தமிழ் நெஞ்சங்களே!

தஞ்சையில் உலகத் தமிழர் பேரமைப்பு நிறுவும் - முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்கு - உங்களால் இயன்ற நிதி உதவி தந்து துணை நில்லுங்கள்.

இதையும் நமது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு சிறு தொடர் நிகழ்வாய்க் கருதி இன்றே தோள் கொடுப்போம்

உங்கள் நிதி - தமிழீழ விடுதலைக் களத்தில் உயிர் சிந்திய போராளிகள் - பொதுமக்கள் - தமிழ்நாட்டில் அவர்களுக்காய் உயிர் கொடுத்த நெருப்பு மேனிகள் - மீண்டும் உயிர்ச் சிலைகளாய் நிமிர உதவும்.

நன்றி!

காசி ஆனந்தன்
தமிழீழம்

நிதி அனுப்ப வேண்டிய முகவர்

பழ. நெடுமாறன்
தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு
58, மூன்றாவது முதன்மைச் சாலை,
ஆழ்வார் திருநகர் விரிவாக்கம்,
சென்னை-600 087.
தொலைபேசி : 23775536, தொலைநகல் : 23775537,
மின்னஞ்சல் : thamiz@thenseide.com

வங்கிக் கணக்கு விவரம்:

உலகத் தமிழர் பேரமைப்பு (World Tamil Confederation)
கணக்கு எண் : 457022479
இந்தியன் வங்கி, மயிலாப்பூர் கிளை.
சென்னை - 600 004.

No comments:

Post a Comment